முகப்பு
மதுரை

பெரியார் பேருந்து நிலையத்தில் கூடுதல்  கட்டணம் வசூலித்த கழிப்பறையின் உரிமம் ரத்து

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த கழிப்பறையின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

Updated On : 15 மே, 2018 at 2:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த கழிப்பறையின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) பகுதிகளில் கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு வெளிவீதி மற்றும் பெரியார் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆணையர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.
பெரியார் பேருந்து நிலையத்துக்குள் கடைகளை ஆய்வு செய்த ஆணையர், மாநகராட்சிக்கு உரிய முறையில் வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல்' வைக்க வருவாய் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பேருந்து நிலைய வளாகத்துக்குள் நடைபாதைகளில் வைக்கப்பட்ட கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பரப் பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பேருந்து நிலைய கழிப்பறைகளை திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்தார். இதையடுத்து, கழிப்பறையை பராமரிப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற உரிமத்தை ரத்து செய்ய ஆணையர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார். பெரியார் பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையை ஆய்வு செய்தார். பின்னர், துப்புரவுப் பணியாளர்கள் சீருடையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மண்டலம் 4 உதவி ஆணையர் கெளசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.