மசாஜ் மையத்தில் வெளி மாநிலப் பெண்களை ஏமாற்றி பாலியலில் ஈடுபடுத்தியவர் கைது
மதுரையில் மசாஜ் மையத்தில் வேலை தருவதாகக் கூறி, வெளி மாநிலப் பெண்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியது தொடர்பாக, பெண் உள்பட 3 பேரை போலீஸார்
மதுரையில் மசாஜ் மையத்தில் வேலை தருவதாகக் கூறி, வெளி மாநிலப் பெண்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியது தொடர்பாக, பெண் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரைஅண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் மசாஜ் மையத்தில் வெளி மாநில பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தி வருவதாக, அண்ணா நகர் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், மசாஜ் மையத்துக்கு போலீஸார் சென்றபோது, மையத்தின் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
அதையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களான மாடக்குளத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன் (32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளத்தைச் சேர்ந்த சனூப்(23) ஆகிய மூவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், மேற்கு வங்கம், கேரளத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மசாஜ் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, மதுரைக்கு அழைத்து வந்து பாலியலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர், மூவரையும் கைது செய்த போலீஸார், மசாஜ் மையத்தில் இருந்து வெளி மாநிலப் பெண்கள் மூவரையும் மீட்டு, அரசுக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச்சென்ற உரிமையாளர் பாலாவை தேடி வருகின்றனர். மேலும், மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்த உதவும் ஸ்வைப்பிங் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மசாஜ் மையத்துக்கு வாடிக்கையாளர்களை ஆன்-லைன் மூலம் விளம்பரம் செய்து ஈர்த்துள்ளனர். மேலும், ஆன்-லைன் மூலமாகவே கட்டணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளனர். இதை இணைய தளம் மூலம் அறிந்து மசாஜ் மையத்துக்கு ஏராளமான இளைஞர்கள் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.