மர அறுவை ஆலையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு: இருவர் கைது
மதுரையில் மர அறுவை ஆலையில் மின்சாரம் பாய்ந்து, சிறுவன் சனிக்கிழமை இறந்தான்.
மதுரையில் மர அறுவை ஆலையில் மின்சாரம் பாய்ந்து, சிறுவன் சனிக்கிழமை இறந்தான். இதையடுத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் உரிமையாளர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ராஜபாண்டி (14). விராட்டிபத்தில் உள்ள தனியார் மர அறுவை ஆலையில் கடந்த மூன்று மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆலையில் மரம் அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்தபோது, ராஜபாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜபாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராஜபாண்டியின் தந்தை கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார், குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். பின்னர், மர அறுவை ஆலையின் உரிமையாளர்கள் கங்காராம் (50), அவரது சகோதரர் பவன்பட்டேல் (45) ஆகியோரை கைது செய்தனர்.