முகப்பு
மதுரை

மதுவிலக்கை ஆதரித்து மதுரையில் நடைபயணம்: குமரிஅனந்தன் பேட்டி

மதுவிலக்கை ஆதரித்தும், தவிடு நீக்காத அரிசியை நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கவும் வலியுறுத்தி

Updated On : 8 அக்டோபர் 2018, 7:57 am IST
பகிர்:

மதுவிலக்கை ஆதரித்தும், தவிடு நீக்காத அரிசியை நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கவும் வலியுறுத்தி மதுரையில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன் கூறினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை காந்தியடிகள் 150 வது பிறந்தநாள் விழா மற்றும் காந்திய செம்மல்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குமரி அனந்தன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் காந்தியடிகள் அரையாடை அணிந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் 34, 773 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அக்கடைகளில் முதல் கட்டமாக தவிடு நீக்காத அரிசியை விநியோகிக்க வேண்டியது அவசியம். தற்போது உடல்நலக் குறைவுக்கு உணவு முக்கிய காரணியாக உள்ளது. ஆகவே சத்து மிக்க அரிசியை மக்கள் உண்ணவேண்டும் எனும் அடிப்படையிலே தவிடு நீக்காத அரிசியை விநியோகிக்க வலியுறுத்துகிறேன்.
மதுவிலக்கை வலியுறுத்தி ஏற்கெனவே சென்னையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டேன். அதற்கு மக்கள் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஆதரவளித்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரையில் விரைவில் மது விலக்கை வலியுறுத்தியும், மக்களிடம் மது அருந்தக்கூடாது என கோரிக்கை விடுத்தும் நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளேன். நடைபயணத்தை காந்தி அரையாடைக் கோலத்துக்கு மாறிய இடத்திலேயே தொடங்க உள்ளேன். அந்த நடைபயணத்தில் விரும்புவோர் அனைவரும் பங்கேற்கலாம். நடைபயணத் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
விழா: பின்னர் நடைபெற்ற விழாவில் குமரிஅனந்தன், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் கே.எம்.நடராஜன், தமிழ்நாடு காந்தி மன்ற இயக்க துணைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தேசிய வலிமை ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.