மதுரையில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு தொடக்கம்
மதுரையில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மதுரையில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை நிரப்பும் விதமாக கடந்த மார்ச் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் நடந்த எழுத்துத்தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடல்தகுதித் தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ள தேர்வில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை உடல் தகுதித்தேர்வுக்கு 778 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 556 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 222 பேர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்கவில்லை. மாநகரக் காவல் தலைமையிட துணை ஆணையர் மகேஷ், உடல் தகுதித் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இதனால் இந்த ஆண்டு முறைகேடுகள் நடக்காதவாறு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.