லாரி மீது கார் மோதி விபத்து: தூத்துக்குடி அரிசி ஆலை உரிமையாளர் சாவு
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், தூத்துக்குடி அரிசி ஆலை
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், தூத்துக்குடி அரிசி ஆலை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை பலியானார். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த வன்னியராஜ் மகன் கமல் (40). இவர் தூத்துக்குடியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவர் தனது மனைவி பிரகன்யா மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். கார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கரிசல்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த, டீத்தூள் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கமல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த பிரகன்யா மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் நகர் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.