மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பாஜகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெறாதவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர்.
இந்தநிலையில், அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தன்மீதான புகாரை மறுத்து பொதுமக்களிடம் விளக்கமளித்தாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.