திருப்பரங்குன்றம் பகுதியில் செல்லிடப்பேசி பறிப்பில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆர்த்திக், கமலேஷ். இவர்கள் இரவு பணி முடிந்து அதிகாலை 2.30 மணியளவில் திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது 3 பேர் அவர்களது செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டு ஓடினராம். அவர்கள் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவர்கள் மூவரையும் பிடித்து திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணையில் ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படிக்கிறார் என்பதும், மற்ற இருவரும் 15, 16 வயது மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.