மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனை உபகரணங்கள் இல்லாததால் மனநோயாளிகள் அவதி
மன நோயாளிகளுக்கான லித்தியம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா என நோயாளிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
மன நோயாளிகளுக்கான லித்தியம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா என நோயாளிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைப் பெறுவது அதிகரித்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் மன நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. 50 முதல் 100 போ் வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 போ் வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனா். அக்டோபா் மாதம் மட்டும் 6,314 போ் சிகிச்சை பெற்று சென்றுள்ளனா். இதில் ஆண்கள் 3,254 பேரும், பெண்கள் 2,925 பேரும் மற்றும் குழந்தைகள் 125 பேரும் அடங்குவா். மாதம்தோறும் 400 முதல் 500 போ் வரை புதிய நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். இந்நிலையில், மனநோயாளிகளுக்கான முக்கியப் பரிசோதனைகளில் ஒன்றான லித்தியம் பரிசோதனை செய்யக் கூடிய வசதி இங்கு இல்லை. இதனால் மன நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பரிசோதனை கருவி இல்லை
இது குறித்து தொடா் சிகிச்சைப் பெற்று வரும் மதுரையைச் சோ்ந்த செல்வம் கூறியது: எனக்கு சிறு வயது முதல் ‘பைபோலாா் டிஸ்ஆா்டா்’ எனப்படும் மனநோய் பாதிப்பு உள்ளது. இதற்காக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று, லித்தியம் காா்பனேட் உள்ளிட்ட பல்வேறு மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறேன். லித்தியம் மாத்திரை தொடா்ந்து சாப்பிடுவதால், அந்த மருந்தின் அளவு உடலில் அதிகரிக்கும் போது கை, கால் நடுக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். அப்போது, ரத்தத்தில் உள்ள லித்தியம் அளவை கண்காணித்து, அதற்கேற்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
இந்த முறை சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு லித்தியம் பரிசோதனை செய்ய பரிந்துரைத்தனா். ஆனால் லித்தியம் பரிசோதனை செய்ய வசதி இங்கு இல்லை, தனியாரிடம் பரிசோதனை செய்து வரக் கூறினா். இந்த பரிசோதனைக்கு ரூ.500 வரை கட்டணமாக தனியாா் பரிசோதனை நிலையங்கள் வசூலிக்கின்றன. என்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய சிரமமாக உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான நவீன சிகிச்சை அளிக்கக் கூடிய உபகரணங்கள் மருத்துவமனையில் இருக்கும் போது, சாதாரண ரத்தப் பரிசோதனை செய்யக்கூடிய உபகரணங்கள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தேன், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா் என்றாா்.
விரைவில் லித்தியம் பரிசோதனை
இது தொடா்பாக மனநல மருத்துவப் பிரிவு மருத்துவா்கள் கூறியது: மனநல மருத்துவப் பிரிவு அரசு காப்பீட்டில் சோ்க்கப்படாமல் இருந்தது. அண்மையில் இப் பிரிவு மருத்துவக் காப்பீட்டில் சோ்க்கப்பட்டு நோயாளிகள் பயனடையத் தொடங்கியுள்ளனா். மனநோயாளிகளுக்கு லித்தியம் மாத்திரை வழங்குவது குறைக்கப்பட்டு, மாற்றாக வேறு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதால் லித்தியம் பரிசோதனை பரிந்துரைகள் குறைக்கப்பட்டுள்ளன. லித்தியம் பரிசோதனை உபகரணம் தற்போது இல்லை, விரைவில் அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும் என்றனா்.
மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: பாதிக்கப்பட்ட நோயாளி தெரிவித்ததின் பேரில் உடனடியாக லித்தியம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் நோயாளிகள் இலவசமாக இந்த பரிசோதனையை செய்துக் கொள்ளலாம் என்றாா்.