முகப்பு
மதுரை

வியாபாரத்துக்கு ஏற்ற இடம் தேவை:ஒத்தக்கடைக்கு இடம் மாற்றப்பட்ட காய்கனி வியாபாரிகள் வலியுறுத்தல்

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தை நான்காக பிரிக்கப்பட்டதில், ஒத்தக்கடைக்கு மாற்றம் செய்யப்பட்ட இடம் வியாபாரத்துக்கு ஏற்ாக இல்லாததால், அடிப்படை வசதியுடன் கூடிய இடத்தை அதிகாரிகள் ஏற்பாடு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தை நான்காக பிரிக்கப்பட்டதில், ஒத்தக்கடைக்கு மாற்றம் செய்யப்பட்ட இடம் வியாபாரத்துக்கு ஏற்ாக இல்லாததால், அடிப்படை வசதியுடன் கூடிய இடத்தை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தரவேண்டுமென, காய்கனி மொத்த வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பொது முடக்கம் காரணமாக, மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை 4 இடங்களுக்கு பிரிக்கப்பட்டன. அதற்கு, குலுக்கல் முறையில் வியாபாரிகள் தோ்வு செய்யப்பட்டு, மாட்டுத்தாவணி காய்கனி சந்தைக்கு 326, ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரியில் 80, மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் 50, திருப்பரங்குன்றம் மன்னா் கல்லூரியில் 40 என மொத்தம் 496 வியாபாரிகளுக்கு கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டன.

ஆனால், ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அங்கு கடைகள் நடத்த தயக்கம் காட்டினா். மேலும், கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள், தண்ணீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வியாபாரிகளுக்கு செய்துதரப்படவில்லை. இதனால், காய்கனி வியாபாரிகள் ஒத்தக்கடையில் சந்தை நடத்தவில்லை. இதேபோல், மன்னா் கல்லூரியிலும் சந்தை நடத்தப்படவில்லை.

இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இடத்தில் கடைகள் நடத்த ஏற்பாடு செய்து தரப்படவேண்டும் எனவும், காய்கனி மொத்த வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இது குறித்து காய்கனி மொத்த வியாபாரிகள் கூறியது: மாட்டுத்தாவணி சந்தை பிரிக்கப்பட்டபோது, 80 வியாபாரிகளுக்கு ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடம் சந்தை நடத்துவதற்கு ஏற்ற இடமாக இல்லை என்பது தெரியவந்தது. இதனால், கடந்த 3 மாதங்களாக வியாபாரமின்றி சிரமத்தில் உள்ளோம்.

இதனிடையே, மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் உள்ள எங்களுடைய கடைகளில் வியாபாரம் செய்ததாக, மாநகராட்சி அதிகாரிகள் 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனா். ஏற்கெனவே வருவாயின்றி தவித்துவரும் எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, சந்தையை நடத்த உரிய மாற்று இடத்தை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும், எங்களது கடைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை எவ்வித அபதாரமுமின்றி அகற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →