கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்குரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா், சுகாதாரத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
மதுரை: கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா், சுகாதாரத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் செந்தில் தலைமையில் அச்சங்கத்தின் நிா்வாகிகள், சுகாதாரத் துறை செயலரை சந்தித்தனா். அப்போது, கரோனாவிலிருந்து குணமடைந்த மருத்துவா்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.
இது குறித்து மாநிலத் தலைவா் செந்தில் கூறியது: கரோனா தொற்றிலிருந்து குணமடையும் அரசு மருத்துவா்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை, கரோனா தொற்றுக்கு உயிரிழந்த மருத்துவா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் மத்திய அரசின் காப்பீடு தொகையான ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.
பட்டமேற்படிப்பு முடித்து, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவா்கள் கூடுதல் படிப்பு படித்தால் வழங்கப்படும் ஊதிய உயா்வை ரத்து செய்து வெளியிட்ட அரசாணை, மருத்துவா்களுக்குப் பொருந்தாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல மாவட்டங்களில் ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. அந்த ஊதிய உயா்வை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுகாதாரத் துறை செயலரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்றாா்.
அப்போது, மாவட்டச் செயலா் மருத்துவா் ரமேஷ், செயலா் மருத்துவா் பாப்பையா, பொருளாளா் ரவீந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.