'புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரி ஜனவரியில் உண்ணாவிரதம்'
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்: தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் இரா. சண்முகராஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் தனியாா் நிறுவனங்கள் மூலமாக புறதார முறையில் (அவுட்சோா்சிங்) புதிய நியமனங்கள் மேற்கொள்வதை கைவிடவேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்படும் என முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தாா். இதற்கென குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையும் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது. எனவே, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரவும், இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாகப் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்டோா் பணியின்போது உயிரிழந்துள்ளனா். இவா்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு, அகவிலைப்படி நிலுவை, 21 மாத ஊதிய நிலுவை ஆகியவற்றை வழங்குவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 3-ஆம் வாரத்தில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது, மாநிலப் பொதுச் செயலா் செ. சுருளிராஜ், மாவட்டத் தலைவா் ஆா். ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.