பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை: மதுரை காவல் ஆணையா்
மதுரையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
மதுரையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடா்பாக காவல் துறை சாா்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட யாருக்கும் அனுமதியில்லை. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எந்தவொரு விடுதிகளிலும் நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது.
இருசக்கர வாகனங்களில் குழுவாகச் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நகர எல்லைக்குள் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவித தடையுமில்லை. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீஸாரின் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் கடைப்பிடிக்க வேண்டும். காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.