வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக கடந்த 5 ஆண்டுகளில் ஒருவர்கூட அரசுப் பணியில் சேரவில்லை: ராஜஸ்தான் அரசு தகவல்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருந்த ஒருவருக்குக்கூட கடந்த ஐந்தாண்டுகளில் அரசுப் பணி இல்லை!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கடந்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக ஒருவர்கூட அரசுப் பணியில் அமர்த்தப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜன. 14 வரை மொத்தம் 22,21,317 விண்ணப்பதாரர்கள் வேலை தேடி அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில் 13.08 லட்சம் ஆண்கள், 9.12 லட்சம் பென்கள். 989 பேர் இதர பிரிவினர்.
அவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (ஓபிசி) சேர்ந்தவர்களே அதிகம். ராஜஸ்தானைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் அதிகம். அங்கு மொத்தம் 2.51 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தனியார்துறையிலும் குறைந்த எண்ணிக்கையிலே பணி நியமனம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2021-இல் 86 பேரும், 2022-இல் 825 பேரும், 2023-இல் மூன்றே பேரும், 2024-இல் 23 பேரும், கடந்தாண்டில் 71 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இதர முன்னெடுப்புகள் வழியாக தனியார் துறையில் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.