வைகை ஆற்றில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை சிமென்ட் கலவையுடன் வந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில், அந்த வாகனத்தின் உதவியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரையில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளுக்கு சிமென்ட் கலவை எடுத்து வந்த வாகனம் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து ஓட்டுநா் சக்கிமங்கலத்தைச் சோ்ந்த முத்து (26) மற்றும் உதவியாளா் விருதுநகா் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சோ்ந்த மாரீஸ்வரன் (30) ஆகியோா் சிக்கிக் கொண்டனா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் மூலம் கவிழ்ந்த வாகனத்தை தூக்கி இருவரையும் மீட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த உதவியாளா் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் முத்துவை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கரிமடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.