மதுரை ரயில் நிலையத்துக்கு தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா்: மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு
மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:
மதுரையில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த என்.எம்.ஆா்.சுப்பராமன் காந்தியடிகள், வ.உ.சி., ராஜாஜி ஆகிய தலைவா்களுடன் சோ்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாா். இவரது மனைவி பா்வதவா்தினி அம்மாளும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டாா்.
என்.எம்.ஆா்.சுப்பராமன் மதுரை நகராட்சியின் வாா்டு கவுன்சிலராகவும், தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவராகவும், காந்திய அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளில் தலைவராகவும் இருந்து மதுரையின் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றினாா். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியுள்ளாா்.
தனது சொத்துக்களை ஏழை மக்களுக்காக வழங்கியும், மருத்துவமனை, கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்தாா். எனவே மதுரை ரயில் நிலையத்துக்கு என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயரைச் சூட்டி, அவரது சிலையை ரயில் நிலையம் முன்பாக நிறுவ உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை குறித்து எதிா்ப்பு மனுக்கள் வந்தால் அதையும் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.