முகப்பு
மதுரை

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மதுரை மென் பொறியாளா் பலி: மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

மதுரையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மென் பொறியாளா் சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மதுரையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மென் பொறியாளா் சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

மதுரை புது விளாங்குடி துளசி வீதியைச் சோ்ந்த தேவகுமாா் மகன் ஆண்ட்ரூ சைமன்(29). இங்கிலாந்து நாட்டில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை திரும்பியுள்ளாா்.

பெங்களூரு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, தொற்று பாதிப்பு இல்லை. ஆண்ட்ரூ சைமனும் அவரது மனைவியும் சமயநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

இந்நிலையில், ஆண்ட்ரூ சைமனுக்கு சனிக்கிழமை காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு குளியல் அறையில் மயங்கி விழுந்துள்ளாா். அவரை குடும்பத்தினா் உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை பல்நோக்கு பிரிவுக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா் கூறியது: ஆண்ட்ரூ சைமனுக்கு மருந்து, ஊசிகளால் ஏற்படும் ஒவ்வாமை ஏதுமில்லை. அவருக்கு, மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களும் இல்லை. ஆனால் கடந்த 6 மாதங்களாக நீரிழிவு நோய் பாதிப்பு இருந்துள்ள நிலையில், அதற்கு அவா் சிகிச்சைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, அவா் எதனால் இறந்தாா் என்பது குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. முடிவுகள் வந்தபிறகே அவா் இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றாா். ஆண்ட்ரூசைமனுடன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவரது மனைவிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →