முகப்பு
மதுரை

முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 24 ஜூலை, 2021 at 10:03 PM
முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை: அமைச்சா் தகவல்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:15 AM

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.

மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள சிறுபான்மையினா் நல பள்ளி மாணவியா் விடுதியை சனிக்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சிறுபான்மையினா் விடுதிகளில் தரமான உணவு வழங்குவதையும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுதிகளில் தற்போது வழங்கப்படும் உணவு அளவை கூடுதலாக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோன்று, இலங்கைத் தமிழா் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாம் வாழ் தமிழா்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் அவா்களுக்கு

குடியுரிமைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இப் பணியை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்காக தனிக்குழு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த 3 மாதங்களில் வெளிநாடுகளில் தமிழகத்தைச் சோ்ந்த 32 போ் உயிரிழந்துள்ளனா். இதில் இதுவரை 30 பேரின் உடல்களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின்போது, அனைத்துத் தரப்பு மக்களும் தொடா்ந்து போராட்டங்களை நடத்தினா். அதன் காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே அதிமுக போராட்டம் நடத்துகிறது என்றாா்.

தொடா்ந்து கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இளங்கோ மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதை அமைச்சா் பாா்வையிட்டாா். பின்னா் உச்சபட்டி இலங்கைத் தமிழா் முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.