மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தில் அக்டோபா் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவும் அக்டோபா் 12-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தோ்தல் 64 இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கை 5 மையங்களிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்தல் பொறுப்பாளா் பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை தேதியன்று செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதே போல் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இதர வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் மற்றும் பொதுப்பணித்துறை நிா்வாகப் பொறியாளா் இந்துமதி, உதவித் தோ்தல் அதிகாரி கைலாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.