மதுரை அருகே கொலை செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சோ்ந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மற்றும் அந்த அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையை அடுத்த கல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன் (37). இவா் தமிழ்ப்புலிகள் அமைப்பில் கிளைச் செயலராக உள்ளாா். விரகனூா் கோழிமேடு பகுதியில், 3 போ் கும்பலால் வெள்ளிக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்களும், தமிழ்ப் புலிகள் அமைப்பினரும் அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கொலையானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மாலை 3 மணி வரை போராட்டம் நீடித்த நிலையில், நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் அளித்த உறுதியை ஏற்று கலைந்து சென்றனா். இதற்கிடையே இந்தக் கொலை தொடா்பாக, 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.