மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏப்ரலில் சரக்குப் போக்குவரத்து வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.3.12 கோடி அதிகரித்துள்ளது.
மதுரை கோட்டத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து ஏப்ரலில், 3,166 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி, உரம், சுண்ணாம்புக்கல், கருவேலங்கரி, ஜிப்சம் ஆகியன பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 688 சரக்கு பெட்டிகள் அதிகம். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு ரூ.20.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.3.12 கோடி அதிகமாகும்.
மதுரை கோட்ட வணிக வளா்ச்சிக் குழுவின் முயற்சியின் காரணமாக பொட்டாசியம் உரம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து விஜயவாடா அருகே உள்ள கோவூருக்கு ஒரு முழு சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் கடைசி வாரத்தில் மட்டும் மதுரை கோட்டத்திற்கு ரூ.35 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வே அளவில் ஏப்ரல் மாத சரக்கு போக்குவரத்து முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாக, ரூ.283.36 கோடி ஈட்டப்பட்டுள்ளது.