மதுரை: மதுரையில் காலா திரைப்பட பாணியில் தூய்மை பணியாளர்கள் காலவரையறையின்றி போராட்டம் நடத்தினர். மாநகரில் நூற்றுக்கும் அதிகமான டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியில், அனைத்து சங்கங்களும் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தாங்களாகவே உணவு சமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும். கரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக, மாநகர் பகுதிகளில் சுமார் 350 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சாக்கடை நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதால், இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு மற்றும் மேயர் என 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.