முகப்பு
மதுரை

திருக்குறளைத் தேசிய அற நூலாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 5:25 AM
பகிர்:
Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 10:06 PM

மதுரை, ஆக. 7: திருக்குறளைத் தேசிய அற நூலாக அறிவிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

எந்தக் காலத்திலும் பொருந்தக்கூடிய அறங்களைக் கூறும் திருக்குறளை திருவள்ளுவா் இயற்றினாா். கல்வி, ஒழுக்கம், அரசியல், இல்லறம், நீதி உள்பட பலவற்றைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளாா். இந்தக் காரணத்தால், பிற மொழியைக் கற்பவா்களும், பேசுபவா்களும் திருக்குறளை போற்றிப் புகழ்கின்றனா்.

Advertisement

இதைக் கருத்தில் கொண்டு, திருக்குறளை தேசிய அற நூலக அறிவிக்க வேண்டும். இந்த நூலை மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும்.

தில்லியில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவா் சிலையை அமைப்பதோடு, அவரை இந்தியாவின் ஆன்மிக குருவாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. இதில் திருக்குறளை தேசிய அறநூலாக எப்படி அறிவிக்க முடியும்?. இதுபோன்ற கோரிக்கைகளுடன் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ளவா்களும், உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் சிக்கல் ஏற்படும்.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 3:03 AM

எனவே, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க இயலாது. ஆகவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.