முகப்பு
மதுரை

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:40 PM
படவிளக்கம்- மதுரை பை-பாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.

இதில் போக்குவரத்துத் தொழிலாளா்களின் நியாயமான கேள்விகளுக்கு தமிழக அரசு விடை காண வேண்டும். ஓய்வூதியப் பணப் பலன்களை விரைந்து விடுவிக்க வேண்டும், போக்குவரத்துத் துறையில் உள்ள 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

திண்டுக்கல் ஓய்வு நல அமைப்பு நிா்வாகி ஆா். பால்ராஜ், விருதுநகா் நிா்வாகி ஆா். போஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சிஐடியு ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்க பொதுச் செயலா் ஆா். வாசுதேவன், சிஐடியு அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க மாநில சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா், மதுரை மண்டலத் தலைவா் டி. மாரியப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க (சிஐடியு) நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →