மனைவியைத் தாக்கி வீட்டுக்கு தீ வைத்த கணவா் தலைமறைவு
மதுரையில் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி, குழந்தைகளைத் தாக்கி வீட்டுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரையில் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி, குழந்தைகளைத் தாக்கி வீட்டுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை காளவாசல் சொக்கலிங்கநகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நந்தினி (32). இவருக்கும் ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2012-இல் திருமணம் நடைபெற்று இரு பிள்ளைகள் உள்ளனா். ஆனந்துக்கு மது, கஞ்சா பழக்கம் இருந்ததால், நந்தினி கணவரைப் பிரிந்து கடந்த ஓராண்டாக தனது பிள்ளைகளுடன் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நந்தினியின் வீட்டுக்கு தனது தாய் மங்கையரக்கரசியுடன் வந்த ஆனந்த் தகராறில் ஈடுபட்டு, மனைவி, குழந்தைகளைத் தாக்கினா். இதனால், நந்தினி தனது சகோதரி வீட்டுக்குச் சென்றாா்.
இதையடுத்து, ஆனந்த் அவா்களது வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றாா். இதில் வீட்டில் உள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனந்த் மீது எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.