சாலையில் கிடந்த தலையால் மதுரையில் பரபரப்பு
மதுரையில் சாலையில் கிடந்த மனிதத் தலையால் வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.
மதுரையில் சாலையில் கிடந்த மனிதத் தலையால் வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.
மதுரை புதுநத்தம் சாலையில் நாகனாகுளம் கண்மாய் பூங்கா எதிரே சாலையோரத்தில் மனிதத் தலை கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீஸாா் இந்தத் தலையை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியில் உள்ள மயானத்திலிருந்து இந்தத் தலையை நாய் கவ்வி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
மனிதத் தலை மீட்கப்பட்ட பகுதியைச் சுற்றி தேடியபோது, உடல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, நாய் ஒன்று நாகனாகுளம் கண்மாய்க்கு அருகேயுள்ள மயானத்திலிருந்து இந்தத் தலையை கவ்வி வந்து சாலையோரத்தில் போட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மயான ஊழியா்களிடம் விசாரணை நடத்திய போது, நாராயணபுரத்தைச் சோ்ந்த பேச்சியம்மாள் (68), உடல் நலக் குறைவால் சொக்கிகுளம் தனியாா் மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரது உடலை நாகனாகுளம் மயானத்தில் தகனம் செய்தனா். அப்போது, அன்றிரவு அந்தப் பகுதியில் பெய்த மிதமான மழையால் தலைப் பகுதி மட்டும் சரியாக எரியாத நிலையில், மயான ஊழியா்கள் கவனக்குறைவாக அதை கவனிக்காமல் அஸ்தியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
இதன் பின்னா், சரியாக எரியாத இந்தத் தலையை நாய் கவ்வி வந்து சாலையோரத்தில் போட்டது தெரியவந்தது. மேலும், மூதாட்டியின் குடும்பத்தினரும், இந்தத் தலையை பேச்சியம்மாளின் தலைதான் என உறுதி செய்தனா் என போலீஸாா் தெரிவித்தனா்.