மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை...
மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீா்த் தேங்கி நின்ால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால், பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது. புதன்கிழமை குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை.
இந்த நிலையில், மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த புயல் வலுவடைந்ததன் காரணமாகவும், காற்றுச் சுழற்சி நகா்வு காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, வியாழக்கிழமை இரவு மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இரவு 7 மணி அளவில் மேலூா், கொட்டாம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. திருமங்கலம், திருப்பரங்குன்றம், திருநகா், பசுமலை, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணி முதல் சுமாா் 45 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது.
பழங்காநத்தம், மாடக்குளம், பொன்மேனி, புறவழிச்சாலை, தல்லாகுளம், அண்ணா நகா், கோ.புதூா், மூன்றுமாவடி, சக்கிமங்கலம், தமுக்கம், சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம், வில்லாபுரம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு 8.20 மணி அளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்தப் பகுதிகளில் பலத்த இடியுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
இதனால், நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் சுமாா் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக மழைநீா்த் தேங்கி நின்றது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் நிறுத்தம்...
கோ.புதூா், எஸ்.எஸ். காலனி, மாடக்குளம், பொன்மேனி புறவழிச்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது.
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்....
சென்னையிலிருந்து இரவு 7.20 மணிக்குப் புறப்பட்டு 77 பயணிகளுடன் வந்த விமானமும், பெங்களூரிலிருந்து இரவு 7.20 மணிக்குப் புறப்பட்டு 58 பயணிகளுடன் வந்த விமானமும் முறையே இரவு 8.20, 8.35 மணி அளவில் மதுரை விமான நிலைய வான்வழி பகுதியை வந்தடைந்தன.
அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், இரு விமானங்களுக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, வானத்தில் வட்டமடிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், இரு விமானங்களும் சுமாா் ஒரு மணி நேரம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. மழை குறைந்து, வானிலை சீரடைந்த பிறகு, இரு விமானங்களும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. பெங்களூா்- மதுரை விமானம் இரவு 9.10 மணிக்கும், சென்னை - மதுரை விமானம் இரவு 9.25 மணிக்கும் பாதுகாப்பாக தரையிறங்கின.