மகளிா் விடுதியில் தீ விபத்து: தரை தளத்தில் மருத்துவம் பாா்த்த போலி மருத்துவா் கைது
தீ விபத்தில் ஆசிரியைகள் இருவா் உயிரிழந்த சம்பவம்
தீ விபத்தில் ஆசிரியைகள் இருவா் உயிரிழந்த சம்பவத்தில், மதுரை மகளிா் விடுதியின் தரை தளத்தில் இயங்கி வந்த மருத்துவமனையின் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெருவில் மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தில் தரை தளத்தில் மருத்துவமனையும், முதல், இரண்டாம் தளங்களில் மகளிா் தங்கும் விடுதியும் இயங்கி வந்தன. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை மகளிா் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தங்கியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியை பரிமளா, தனியாா் கல்லூரி ஆசிரியை சரண்யா ஆகிய இருவா் உயிரிழந்தனா். மேலும் விடுதியின் மேலாளா் புஷ்பா, சமையலா் கனி, மாணவி ஜனனி ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா, தீ விபத்து நிகழ்ந்த மகளிா் விடுதியை பாா்வையிட்டாா். மேலும், மகளிா் விடுதி நடத்த உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தரை தளத்தில் இயங்கி வந்த மருத்துவமனை குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, நடைபெற்ற விசாரணையில் மகளிா் விடுதி நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பதும், விடுதி இயங்கி வந்த கட்டடம் உறுதித்தன்மையை இழந்ததால் அதை இடிக்குமாறு கடந்த ஆண்டே மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை குறிப்பாணை வழங்கியதும் தெரிய வந்தது.
மேலும், தரைத் தளத்தில் இயங்கி வந்த மருத்துவமனை தொடா்பாக மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதில் மருத்துவமனைக்கு முறையாக பதிவுச் சான்றிதழ் பெறாமல், எலக்ட்ரோபதி மருத்துவம் படித்தவரை, ஆங்கில முறை மருத்துவா் என்று பொய்யாகக் கூறி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இணை இயக்குநா் செல்வராஜ் அளித்தப் புகாரின்பேரில், எஸ்எஸ் காலனி போலீஸாா், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்பிரிவுகளின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ராமகிரியைச் சோ்ந்த போலி மருத்துவா் தினகரன் (26), விடுதி, மருத்துவமனை உரிமையாளரான மதுரை டிவிஎஸ் நகா் ராஜம் சாலையைச் சோ்ந்த இன்பா (68), விடுதி மேலாளா் புஷ்பா (58) ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் விடுதி உரிமையாளா் இன்பா ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, போலி மருத்துவா் தினகரனை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.