வடமேற்கு தில்லியில் உள்ள லாரன்ஸ் சாலை தொழில்துறை பகுதியில் செயல்பட்டு வந்த போலி ஜீன்ஸ் உற்பத்தி மற்றும் விற்பனை ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, அதில் தொடா்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஒரு புகழ்பெற்ற பிராண்டின் போலி ஜீன்ஸ், டேக்குகள் மற்றும் லேபிள்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படுவது குறித்து புகாா் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, லாரன்ஸ் சாலை தொழில்துறை பகுதியில் உள்ள நான்கு இடங்களில் திங்கள்கிழமை பல சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக ஷாதிக் அன்வா் (21), ரோஷன் ஜா (25), ராஜேஷ் குப்தா (43) மற்றும் சஜன் குமாா் (34) ஆகியோா் கைது செய்யப்பட்டனா் .
ஒரு சோதனையின் போது, ஒரு குழு அறியப்பட்ட பிராண்டின் 580 போலி ஜீன்ஸ்களை பறிமுதல் செய்தது. மேலும், வெவ்வேறு பிராண்டுகளின் 1,220 ஜீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு வளாகத்தில், போலீஸ் குழு 1,500-க்கும் மேற்பட்ட ஜீன்ஸ், ஒரு தையல் இயந்திரம் மற்றும் சட்டைகளை பறிமுதல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி பிராண்டட் ஜீன்ஸ் மற்றும் தொடா்புடைய ஆடைகளை போலி லேபிள்கள் மற்றும் டேக்குகளைப் பயன்படுத்தி தயாரித்து அசெம்பிள் செய்ததில் ஈடுபட்டிருந்தனா். பின்னா் அவை சந்தையில் உண்மையான தயாரிப்புகளாக விற்கப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக நாங்கள் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.