மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பற்றி...
மதுரை: மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை கே.புதூர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். இவர், தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுக்கு யுவன் (வயது 15) என்ற மகன் உள்ளார். இவர், மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், இவர் தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டிகளிலும் கலந்து கொண்டு, அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் பெற்றோருடன் தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் கோவிலுக்கு சென்றபோது, வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியைp பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கே.புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் யுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.