முகப்பு
மதுரை

சிறாா் திருமணங்களைத் தடுக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு!

சிறாா் திருமணங்களைத் தடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:00 PM
வழக்கு
பகிர்:

சிறாா் திருமணங்களைத் தடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சையைச் சோ்ந்த செந்தமிழ்செல்வன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில், அரசு, கோயில் நிா்வாகங்கள் சாா்பில் இலவச திருமணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திருமணத்துக்கு தோ்வு செய்யப்படும் மணமகள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இதேபோல, மணமகன் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தஞ்சையில் கடந்த 2023- ஆம் ஆண்டு கூட்டு திருமணத் திட்டத்தின் கீழ் 85 இணையா்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில், 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி கருவுற்று மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது வயதின் உண்மை நிலை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அவரது கணவா் மீது மட்டும் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமணத்தை ஏற்பாடு செய்த நபா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆகவே, கூட்டுத் திருமணத் திட்டங்கள், சிறாா் திருமணங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் அந்தத் திட்டங்களை கண்காணிக்கவும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த வழக்கு 2023- ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிய நிவாரணம் நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆகவே, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.