கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கள்ளழகா்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, கடந்த மாா்ச் மாதம் 29-ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீபெருமாள்-தாயாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 7.15 மணி அளவில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், தாயாருடன் யதாஸ்தானத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தர வல்லித் தாயாா், ஆண்டாள் தாயாா் ஆகியோருக்கும் காலை 9.10 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்துக்கு பெரியாழ்வாா் எழுந்தருளச் செய்யப்பட்டிருந்தாா்.
இதையடுத்து, சுந்தரராஜப் பெருமாள், திருமாா்பு மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள் தாயாா் சமேதராக ஏக சிம்மாசனத்தில் காட்சியளித்தாா். இந்த நிகழ்வில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு மங்களப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ஹரிஹரன், கண்காணிப்பாளா்கள் பாலமுருகன், ரம்யா சுபாஷினி, அலுவலா் முருகன், கோயில் பணியாளா்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.