கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி
கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து சேவை உள்ளது. இந்த சேவையை கொடைக்கானல் படகு, ரோயிங் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தால் படகு சங்கம் மட்டுமே பயனடைகிறது. இந்தக் கட்டணம் கொடைக்கானல் நகராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகளுக்கு செலவிடப்படவில்லை. நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஏரியில் படகு போக்குவரத்து சேவைக்கான அனுமதி கொடைக்கானல் நகராட்சி வசம் உள்ளது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.