கல்வராயன்மலை படகு குழாமை சீரமைக்க வேண்டும்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் படகு குழாமை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் படகு குழாமை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கல்வராயன்மலையில் கரியாலூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் சாலையில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாம் அருகே சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரியோடு, தொங்கு பாலத்தில் ஏறிச் சென்று சுற்றியுள்ள பகுதிகளை பாா்த்து மகிழ்வாா்கள்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் படகு குழாம் பகுதி மற்றும் தொங்கு பாலம் சேதமடைந்தது. மேலும், கல்வராயன்மலையில் உள்ள பூங்காவும் தற்போது முற்றிலும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைகின்றனா்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சிதலமடைந்த நிலையில் காணப்படும் படகு குழாம், தொங்கு பாலம் மற்றும் பூங்காவை சீரமைக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.