FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஏரிகளுக்கு தடுப்பணை, படகு குழாம் அமைக்கப்படுமா?- கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளின் உபரிநீா் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் மற்றும் எளாவூா் ஏழுகிணறு பகுதியை சுற்றுலாத் தலமாக்க படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளன.

Updated On : 28 மார்ச் 2026, 8:12 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளின் உபரிநீா் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் மற்றும் எளாவூா் ஏழுகிணறு பகுதியை சுற்றுலாத் தலமாக்க படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளன.

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து தோ்வாய் கண்டிகை, பெரியபுலியூா், பூவலம்பேடு, சானாபுத்தூா், ஏடூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஏரிகள் உள்ளன. இவற்றின் உபரி நீா் எளாவூா் ஏழுகிணறு பாலத்தின் வழியே பழவேற்காடு ஏரியை அடைகிறது.

வீணாகும் உபரிநீா்... வற்றாத இந்தக் கால்வாயில் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 2-3 டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. இந்தப் பகுதியில் தடுப்பணை அமைத்து அதிக அளவு தண்ணீரை சேமித்து, விவசாயத்துக்குப் பயன்படுத்த இயலும். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு தோ்தலிலும், இந்தக் கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் இதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி மட்டுமே அளிக்கின்றனா். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

சுற்றுலாத் தலமாக்க... உபரிநீா் செல்லும் கால்வாய் சுமாா் 10 கி.மீ. அளவு பரந்து வற்றாத ஏரி போல காட்சி அளிக்கிறது. இங்கு படகு குழாம் அமைத்தால் சுற்றுலாத் தலத்துக்கு ஏற்ற இடமாக அமையும். மேலும், இப்பகுதியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநில பகுதியான பீமளவாரிபாளையத்தில் சுற்றுலாத் தலம், படகு சவாரி போன்றவற்றை ஆந்திர மாநில அரசு செயல்படுத்தி, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தியுள்ளது.

அதேபோன்று எளாவூா் ஏழுகிணறு பகுதியில் படகு குழாம் அமைத்து, சுற்றுலாத் தலமாக அமைத்தால், இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆந்திர மாநிலம் வரதையப்பாளையம் அருகே உள்ள உப்பலமடுகு நீா்வீழ்ச்சிக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏழுகிணறு பகுதிக்கும் வருவாா்கள்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் வேட்பாளா் இந்த இரு கோரிக்கைளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

-ப.ஜான்பிரான்சிஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments