மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ எனும் புதிய கருத்தடை சாதன பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு, மகப்பேறியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநா் நடராஜன் தொடங்கிவைத்தாா். இதில் கையின் மேல் பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்தப்படும் குச்சி போன்ற புதிய நவீன கருத்தடை சாதனமான ‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கருத்தாளா்களாகப் பங்கேற்ற மருத்துவா்கள் எஸ்.எஸ். காயத்ரி, பி. ஜெயந்தி பிரசாத் பேசியதாவது:
‘இம்பிளானன் என்.எக்ஸ்.டி’ எனும் புதிய கருத்தடை சாதனம் நீண்ட காலத்துக்குப் பலன் தரக்கூடியது. பாதுகாப்பான, பயனுள்ள இந்தச் சாதனத்தைப் பொருத்துவதும் அகற்றுவதும் மிகவும் எளிது. இது குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்குப் நவீனக் கருத்தடை முறைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை என்றனா்.