பரமக்குடி அணுகுசாலை மற்றும் காந்தி நகர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்துக்களில் இளம்பெண் உள்பட 3 பேர் காயமுற்றனர்.
பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகள் தீனா(18). இவர் வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக சைக்கிளில் அணுகுசாலை வழியாக வந்துள்ளார். விவசாயப்பண்ணை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பரமக்குடியைச் சேர்ந்த சலீம் மகன் அசாருதீன் என்பவர் சைக்கிளில் வந்த தீனா மீது மோதியதில் இருவரும் பலத்த காயமுற்றனர். இதில் தீனா ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் அசாருதீன் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் தீனாவின் தாயார் அனுசியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் காந்திநகர் பகுதி இளையான்குடி சாலையில் நடந்து சென்ற விவசாயி ராமச்சந்திரன் என்பவர் மீது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பரமக்குடியைச் சேர்ந்த முகம்மது சரீப் மகன் முகம்மது நிசாம் என்பவர் மோதினார். இதில் ராமச்சந்திரன் பலத்த காயமுற்றார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கோவிந்தன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.