கந்து வட்டியை ஒழிக்க கிராம மக்களுக்கு கடனுதவி: பாண்டியன் கிராம வங்கி தகவல்
தமிழகத்தில் கந்து வட்டியை ஒழிக்க கிராம மக்களுக்கு கடனுதவி அளிப்பதாக பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் என்.ரவிச்சந்திரன் பேசினார்.
தமிழகத்தில் கந்து வட்டியை ஒழிக்க கிராம மக்களுக்கு கடனுதவி அளிப்பதாக பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் என்.ரவிச்சந்திரன் பேசினார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை பாண்டியன் கிராம வங்கி சார்பில் கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து 400 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடி கடனுதவி வழங்கிப் பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.ஷியாமளாநாதன், நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன்,மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வங்கியின் தலைவர் என்.ரவிச்சந்திரன் பேசியது: வங்கிகள் மக்களின் நண்பர்களாக இருக்க வேண்டும். மக்கள் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்பட விட்டு விடக்கூடாது.
முக்கியமாக கந்து வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. திருநெல்வேலியில் 200 பேருக்கு ரூ.10 கோடி மதிப்பில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கி பலரையும் கந்து வட்டி கொடுமையிலிருந்து விடுவித்திருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் உள்ள மக்களுக்கு ரூ.6 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் உள்ள மக்கள் மது அருந்த மாட்டோம் எனவும் முக்கிய இடங்களில் எழுதி வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் 6 கோடிக்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கியிருக்கிறோம்.
தமிழகத்தில் கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை வீடு,வீடாகவும், தெருத்தெருவாகவும் கிளை மேலாளர்கள் நேரில் சென்று சந்தித்து கிராமத்து மக்களுக்கு தேவையான தொழில் கடன்களை குறைந்த வட்டிக்கு வழங்கி பல கிராமங்களை கந்து வட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறோம் என்றார்.