பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் செவ்வாய்க்கிழமை இரவு பாம்பன் பாலத்தை ரயில்கள் கடந்து செல்வதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்.ஜலசந்தி கடற்கரையில் கடந்த இரு தினங்களாக கடல் கொந்தளிப்புடன் கூடிய பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசியதால், செவ்வாய்க்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சேது விரைவு ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்து செல்வதற்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாம்பன் ரயில் நிலையத்திலேயே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல் மதுரை-ராமேசுவரம் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலும், வாரணாசி- ராமேசுவரம் விரைவு ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.
புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் காற்றின் வேகம் குறைந்ததும், தானியங்கி சிக்னல் இயங்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தை 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் கடந்து சென்றன. தொடர்ந்து 5 மணி நேர தாமதத்துக்கு பின்னர் ரயில்கள் அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக ரயில்களில் இருந்த பயணிகள் மிகுந்த அவதிக்கு உட்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.