ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த விசாரணைக் கைதி, சனிக்கிழமை அதிகாலை தப்பியோடிவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிடர் சிவசங்கர பாண்டியன் (68).
கடந்த வியாழக்கிழமை (டிச.6) இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர் ரூ.1.96 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிக் கொண்டிருந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் வந்ததும், மர்மநபர் தப்பியோடினார். அவரை ஊர் மக்கள் விரட்டிப் பிடித்து தாக்கியதில், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார், அங்கு சென்று பிடிபட்டவரை மீட்டு விசாரித்தனர். இதில், அவர் சென்னை வியாசர்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (30) என்பது தெரியவந்தது.
ஊர்மக்கள் தாக்கியதில் காயமடைந்த சந்தோஷ்குமார், சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சேர்க்கப்பட்டார். அவர், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வார்டிலிருந்த கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச்சென்றார் இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.