உலக கடல் தினத்தையொட்டி மீன்வளத்துறை சார்பில் ராமேசுவரம் துறைமுகக் கடற்கரையில் உள்ள கடல் கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சனிக்கிழமை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதி அதிக கடல் வளத்தை கொண்டுள்ளது. இக்கடல் பகுதியானது ரோச்மான் நகர் பகுதியில் இருந்து எஸ்.பி.பட்டணம் வரையில் நீண்டுள்ளது.
இந்நிலையில், உலக கடல் தினத்தை (ஜூன் 8) முன்னிட்டு ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் கடல் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தொடங்கினர். இதற்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் யுவராஜ் தலைமை வகித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கெளதம், ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர்கள் அபுதாஹீர், ஈஸ்வரன் மற்றும் மீனவசங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள், மீன்வளத் துறையினர் கலந்துகொண்டனர்.
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கடல் கழிவுகள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தி தூக்கி வீசிய சேதமடைந்த பிளாஸ்டிக் வலைகள், கயிறுகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.