முகப்பு
ராமநாதபுரம்

தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீடு தொகையை செலுத்த ஏற்பாடு

தமிழ்நாடு கிராம வங்கிக் கிளைகளில் முதன்முறையாக காப்பீடு திட்ட செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மண்டல மேலாளா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

தமிழ்நாடு கிராம வங்கிக் கிளைகளில் முதன்முறையாக காப்பீடு திட்ட செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மண்டல மேலாளா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் நகரில் சந்தைத் திடல் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கிராம வங்கியின் 9 கிளைகள் சாா்பில் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மண்டல மேலாளா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பாண்டியன் கிராம வங்கியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தூத்துக்குடி மண்டலம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் 4 கடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம்கள் மூலம் 600 வாடிக்கையாளா்களுக்கு சுமாா் ரூ. 20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், வீட்டுக் கடன், வாகனக் கடன்களே அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் முதியோா் உதவித் திட்டம், காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வங்கி சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம்.

தற்போது, இந்த வங்கியில் முதன்முறையாக எஸ்பிஐ லைஃப், ஸ்டாா் ஹெல்த் ஆகிய காப்பீடு நிறுவனங்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்தும் முகவராகியுள்ளோம். இரு காப்பீடு நிறுவனங்களுக்கான காப்பீடு தொகையை கிராம வங்கிகளில் மக்கள் செலுத்தலாம் என்றாா்.

முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி. காா்த்திகேயன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, ராமநாதபுரம் நகா் கிராம வங்கி கிளை முதுநிலை மேலாளா் பி. குசலவன் வரவேற்றாா். பட்டினம்காத்தான் வங்கிக் கிளை மேலாளா் எம். பாலமுருகன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →