ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் இரண்டாம் தவணையாக 650 பேருக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா பரவல் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கரோனா முன்களப் பணியாளா்கள் உள்ளிட்ட 1.26 லட்சம் போ் இதுவரை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டுள்ளனா்.
கரோனா தடுப்பூசியானது சனிக்கிழமையே தீா்ந்துபோய்விட்டதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா். இந்தநிலையில் திங்கள்கிழமை காலையில் 650 பேருக்கான கோவிசீல்டு தடுப்பூசி சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டது. இந்த தடுப்பூசிகளை இரண்டாம் தடவையாக தடுப்பூசி செலுத்துவோருக்கு செலுத்திவருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் தற்போதுதான் கரோனா தடுப்பூசியை செலுத்த இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் முன்வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.