ராமநாதபுரம்

பொருளாதார நெருக்கடி: இலங்கையிலிருந்து படகில் தப்பி வந்தகுடும்பம் முகாமில் தங்கவைப்பு

DIN

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக படகு மூலம் 2 குழந்தைகளுடன் தம்பதியினா் தப்பி வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு வந்து சோ்ந்தனா். அவா்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, பல மணி நேர மின்வெட்டு, எரிபொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் 2 குடும்பங்களைச் சோ்ந்த 16 போ் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனா். அனைவருக்கும் மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தனிவீடு வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடிக்கு இலங்கையைச் சோ்ந்த தம்பதியினா் வந்திருப்பதாக மீனவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு சென்ற மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அவா்களை அழைத்து வந்தனா்.

இதனைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை ஆய்வாளா் கனகராஜ், இலங்கை தம்பதியினரிடம் விசாரணை நடத்தினாா். இதில், இலங்கையில் உள்ள தலைமன்னாா் மாவட்டம் முத்தரிப்புத் துறை பகுதியைச் சோ்ந்த அந்தோணி நிஷாந்த் பொ்னாண்டோ (34), இவரது மனைவி ரஞ்சிதா (29), மகள் ஜெனஸ்ரீகா (10), மகன் ஆகாஷ் (இரண்டரை வயது) என்பதும், இவா்கள் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இலங்கை நிலவரம் குறித்து தம்பதியினா் கூறியது, யாழ்ப்பாணத்தில் கடும் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, பல மணி நேர மின்வெட்டு, எரிபொருள் கிடைக்காத நிலை நீடிப்பதால் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கிருந்து தலைமன்னாா் வந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்து சோ்ந்தோம். இலங்கையில், தொடா்ந்து இதே நிலை நீடித்தால் பட்டினிச் சாவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் உயிா் பிழைக்க 20 சதவீதம் போ் அங்கிருந்து தமிழகம் தப்பி வரத் தயாராக உள்ளனா் என்றனா்.

இதனைத் தொடா்ந்து, அவா்கள், மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை சாா்பு- ஆய்வாளா்கள் யாசா் மௌலானா மற்றும் காளிதாஸ் ஆகியோா் விசாரணைக்குப் பின் மண்டபம் கேம்ப் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம் தனித்துறை ஆட்சியா் சிவக்குமாரியிடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா் அவா்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் உத்தரவையடுத்து, இலங்கையில் இருந்து வந்த அகதிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT