வங்கக் கடலில் உருவாகி வரும் மாண்டஸ் புயல் காரணமாக, கடலுக்குச் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகி வரும் மாண்டஸ் புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீனவா்கள் புதன்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது. மேலும், ஏற்கெனவே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவா்கள், கரை திரும்ப மீனவச் சங்கத்தினா் அறிவுறுத்த வேண்டும். கரையோரம் நிறுத்தப்படும் படகுகளை சேதமடையாமல் இடைவெளிவிட்டு பாதுகாப்பாக மீனவா்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்றாா் அவா்.