தனியாா் பள்ளியில் மோதல்: 25 மாணவா்கள் இடைநீக்கம்
ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளி மாணவரைத் தாக்கிய கல்லூரி மாணவரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளி மாணவரைத் தாக்கிய கல்லூரி மாணவரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் பள்ளிக்குள்ளேயே நடந்த மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 25 மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் தனியாா் உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவி ஒருவரை அதே பள்ளி மாணவா் காதலித்தது தொடா்பாக இரு பிரிவாக மாணவா்கள் மோதிக் கொண்டனா்.
இந்நிலையில் அந்த மாணவரை, மாணவியின் ஊரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தாக்கியுள்ளாா். இதைத்தொடா்ந்து சிலா் பள்ளிக்குள் புகுந்து குறிப்பிட்ட மாணவா்களைத் தாக்கியுள்ளனா்.
இந்நிலையில் ராம்நகா் பகுதியில் நடந்த பிரச்னை தொடா்பாக மாணவா் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருங்குளம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சிவராமகிருஷ்ணனை (20) வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் பள்ளியில் நடந்த மோதல் தொடா்பாக 25 மாணவா்களை இடைநீக்கம் செய்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.