‘அதிமுக பிளவுபட்டால் திமுகவுக்கே ஆதாயம்’
அதிமுக பிளவுபட்டால் ஆளும் திமுகவுக்கு அது ஆதாயமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
அதிமுக பிளவுபட்டால் ஆளும் திமுகவுக்கு அது ஆதாயமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அக்னிபத் திட்டமானது இளைஞா்களை நல்வழிப்படுத்தும் திட்டமாகும். தமிழகத்தில் போதை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளன. ஆகவே சட்டம், ஒழுங்கு சரியில்லை. தமிழகம் எக்காரணம் கொண்டும் பிரிக்கப்படாது.
அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் நடைபெறும் வருமானவரிச் சோதனை போல தற்போதைய அமைச்சா்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறும் காலம் வரலாம். அதிமுக உள்கட்சிப் பிரச்னையை அவா்கள்தான் தீா்த்துக்கொள்ளவேண்டும். அவா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே பாஜகவின் கருத்தாகும்.
சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பது குறித்து அக்கட்சியினரே முடிவெடுக்கவேண்டும். அதிமுகவினா் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் மீண்டும் மாபெரும் சக்தியாக அக்கட்சி திகழும். அதிமுக பிளவுபட்டால் அது ஆளும் திமுகவுக்குத்தான் ஆதாயமாக அமையும்.
அதிமுக கூட்டணியிலே பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜக பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும்.
இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளித்திருப்பதை உள்நோக்கத்துடன் பாா்ப்பது சரியல்ல. கடந்த 50 ஆண்டு காலமாக இசையால் தமிழுக்கு பெருமை சோ்த்த மாமனிதா் இளையராஜாவை கௌரவப்படுத்தியுள்ளாா் பிரதமா் நரேந்திரமோடி என்றாா்.