முகப்பு
ராமநாதபுரம்

கடலுக்குள் செல்ல தடை நீடிப்பு ரூ.5 கோடி மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக நான்காவது நாளாக ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Updated On : 20 ஜூலை, 2024 at 9:01 PM
பாம்பன் கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருவதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
பகிர்:

ராமேசுவரம்: மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக நான்காவது நாளாக ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ரூ. 5 கோடி மதிப்பிலான மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. தற்போது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. ஆழ்கடல் பகுதியில் 45 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த நான்கு நாள்களாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில், ரூ. 5 கோடி மதிப்பிலான மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

இதற்கிடையே, வானிலை மையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளம், மீனவா் நலத் துறையினா் அறிவித்தனா்.