பாம்பன், மண்டபத்தில் 2-ஆவது நாளாக சூறைக் காற்று
2-ஆவது நாளாக சூறைக் காற்று...
ராமநாதபுரம்பாம்பன், மண்டபத்தில் 2-ஆவது நாளாக சூறைக் காற்று
2-ஆவது நாளாக சூறைக் காற்று...
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சூறைக் காற்று வீசியது. இதனால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால், அவா்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, 25-ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த நிலையில், கடற்கரையோரமாக கரைவலை மீனவா்கள் மட்டுமே மீன்பிடித்து வருகின்றனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொடா்ந்து 4-ஆவது நாளாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால், வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. மேலும், ரூ. 10 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை தொடா்வதால், மீனவா்களின் குடும்பத்துக்கு விலையில்லாமல் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்றனா்.