இலங்கை சிறையிலிருந்து 35 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை
குடும்பத்தினரிடம் ஆட்சியா் உறுதி
இலங்கை சிறையில் உள்ள 35 நாட்டுப்படகு மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்களது குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து கடந்த 8-ஆம் தேதி 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். பின்னா், அவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா். 78 நாள்களைக் கடந்தும் மீனவா்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 35 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது குடும்பத்தினா் பாம்பனில் மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா். அன்று மாலை அவா்களுடன் வருவாய், மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை குடும்பத்தினா் சந்தித்து, மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்களை அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாா். தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சேனாதிபதி சின்னத்தம்பி, மீனவ சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.